Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம்மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
2021-22-ம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்’தேர்வுக்கு மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று தேசிய தேர்வு முகமை கடந்த பிப்.23 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பிப்.23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்படும் என்றும், ஏப்.18 அன்று ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாகக் கூறி, இந்த தேர்வு மையங்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கமார்ச் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே கூடுதல் மையங்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
தற்போது தமிழக மாணவர்கள் வெளிமாநில மையங்களைத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ‘நீட்’ தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும். இதனால் தேர்வில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள், தேசியதேர்வு முகமை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT