Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM
மூத்த குடிமக்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்.28வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதியான இபிஎஃப்ஓ, ஜீவன் பிரமாண் பத்திரம் என்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை பிப்.28 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, ஓய்வூதியதாரர்கள் இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நவ.30-ம்தேதி (இன்றுடன்) கடைசி நாளாகஅறிவிக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் உள்ள 3.61 லட்சம் பொது சேவை மையங்கள், ஓய்வூதியங்களை வழங்கும் வங்கிகள், 1.36 லட்சம் தபால் நிலையங்கள், தபால் துறையின் கீழ் இயங்கும் 1.90 லட்சம் தபால் ஊழியர்கள் ஆகியோர் மூலமாக ஓய்வூதியதாரர்கள் இந்த சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்கள் https://locator.csccloud.in/ என்னும் இணையதள முகவரியில் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள பொது சேவை மையங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் வீடுகளிலிருந்து இணையதளம் வாயிலாக இந்த சான்றிதழைச் சமர்ப்பிப்பது தொடர்பாக தபால் நிலையங்களை http://ccc.cept.gov.in/covid/request.aspx என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இம்மாதத்துக்குள் ஜீவன் பிரமாண் பத்திரத்தை சமர்ப்பிக்க இயலாத 35 லட்சம் ஊழியர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் தடை ஏற்படாது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT