Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது என உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளில் பதில் அளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து இருந்தது. இதேபோல யுஜிசியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ‘‘இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை ரத்து செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றுகூடுதல் மனு ஒன்றை, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது யுஜிசி தரப்பில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான பிரதான வழக்கு 20-ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ளதால் அந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறி தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT