Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக காங்கிரஸ்சார்பில் வரும் 22, 28-ம் தேதிகளில் ஏர் கலப்பை பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் 3 வேளாண்சட்டங்களை பாஜக அரசு நிறை வேற்றி உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் பெற்றுவந்த குறைந்தபட்சஆதார விலையும் பறிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களை விற்றுவந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்க சந்தைக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடர் போராட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவரிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளோம். விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை காங்கிரஸின் போராட்டம் தொடரும்.
கோவை கருமத்தம்பட்டியில் வரும் 22-ம் தேதி விவசாயிகள் எழுச்சி மாநாடும், ஏர் கலப்பை பேரணியும் நடைபெறும். இதில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நவ.28-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஏதாவது ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏர் கலப்பைபேரணி நடைபெறும். கள்ளக்குறிச்சியில் நடைபெறும் பேரணியில் நான் பங்கேற்கிறேன். சேலத்தில் கே.வீ.தங்கபாலு, ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சியில் சு.திருநாவுக்கரசர் பங்கேற்கின்றனர். நவம்பர் மாதத்துக்குள் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஏர் கலப்பை பேரணி நடைபெறும். இதற்கு விவசாயிகள், விவசாய சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT