Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மாலத்தீவு முதல் தென் தமிழகம் வரை மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக 18-ம் தேதி (இன்று) தென் தமிழக மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
17-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 17 செமீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 14 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 11 செமீ,சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT