Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

சிஏ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ஐசிஏஐ விளக்கம்

சிஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் நடைபெறும் என்று ஐசிஏஐ தெரிவித்துள்ளது.

இந்திய பட்டய கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் கணக்கு தணிக்கையாளர் பணிக்கான பட்டயக் கணக்காளர் தேர்வு (சிஏ) ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு மே மாதம் நடைபெறவிருந்த சிஏ தேர்வு கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.

நவ.21 முதல் டிச.14 வரை

இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான 2 தேர்வுகளையும் ஒரே கட்டமாக நவம்பரில் நடத்த முடிவானது. அதன்படி நவ.21 முதல் டிச.14-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக சிஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த தேர்வுக்குவிண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நவ.1-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதற்கு மறுப்பு தெரிவித்து ஐசிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தவறான தகவல்கள்

ஏற்கெனவே அறிவித்தபடி சிஏ தேர்வுகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடைபெறும்.தேர்வுக்கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, மாணவர்கள், பெற்றோர் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

மாணவர்கள் தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை www.icai.org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x