Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்களில் 5 லட்சம் பேர் பயணம் கடந்த ஆண்டை விட 35 சதவீதம் கூட்டம் குறைவு

தீபாவளி பண்டிகையை சொந்தஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து அரசு மற்றும் ஆம்னிபேருந்துகள், ரயில்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 35 சதவீதம் கூட்டம் குறைவு என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்று (நவ.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புத்தாடை, இனிப்புகளை வாங்கி கொண்டு மக்கள் நேற்று இரவு வரை புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், சென்னையில் தீபாவளியை கொண்டாடும் மக்கள் ஆடைகள், பொருட்கள், பட்டாசு வாங்க தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

தீபாவளியை சொந்த ஊரில் கொண்டச் செல்லும் மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தேவைக்கு ஏற்றார்போல் 14 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 3,510 சிறப்புபேருந்துகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசலைக் குறைக்க கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் ஏற்கெனவே சென்று விட்டனர். இருப்பினும், வடமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர். இதனால், முன்பதிவு இல்லாத சிறப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டன.

இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகியஇடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட சிறப்புரயில்கள் இயக்கப்பட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்த தென்மாவட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டன. பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.

அரசுப் பேருந்துகளில்...

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பாதிப்பால்ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் திறப்பில் தாமதம் மற்றும் கரோனாஅச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்த்து உள்ளனர். இருப்பினும், 70 சதவீதம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.அதாவது, கடந்த தீபாவளியின்போது 6.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்தனர்.

ஆனால், இந்த ஆண்டில் கடந்த3 நாட்களாக 4.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 35 சதவீதம் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இதேபோல், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப, வரும் 15-ம் தேதிமுதல் 18-ம் தேதி வரை தமிழகம்முழுவதும் மொத்தம் 16 ஆயிரம்பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில்சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், இதர மாநிலங்களுக்கும் தேவையின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். தீபாவளியையொட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் குறைவு’’ என்றனர்.

இதேபோல், கடந்த 2 நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x