Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

யார்க்கர் எக்ஸ்பிரஸ்

வேகப்பந்து வீச்சில் இன்று உலக அளவில் முன்னிலையில் இருப்பவர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா. தனது பந்துவீச்சில் பிரம்மாஸ்திரமாக அவர் கருதுவது யார்க்கர் வகை பந்துவீச்சைத்தான். வேகமாக ஓடிவந்து பேட்ஸ்மேனின் கால் பாதங்களைக் குறிவைத்து பந்துவீசும் முறைக்குப் பெயர்தான் யார்க்கர். இந்த பந்துவீச்சு முறையில் பும்ரா சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம், அவரது அம்மாவின் அன்புக் கட்டளைதான் என்று பும்ரா ஒருமுறை கூறியுள்ளார். பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங், இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.

சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் விதிக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டுதான். முதல் கட்டளை - வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை - விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இந்த 2 கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்துவீசுவதுதான் அந்த வழி. அப்படிச் செய்ததால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால்களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் என்று அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x