Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போதைய கரோனா தொற்று காரணமாக, கூட்டம் சேருவதைத் தவிர்க்கும் பொருட்டு, பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ், ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக உயிர்வாழ் சான்றிதழைசமர்ப்பிப்பதற்கு தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வழிகாட்டுதல்படி, ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை (ஜீவன் பிரமான் பத்திரம்) ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம். இது பதிவு செய்ததேதியில் இருந்து ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும்.
நடப்பு 2020-ம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தொகை உத்தரவு வழங்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓர் ஆண்டு பூர்த்தியாகாமல் உயிர்வாழ் சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
கடந்த ஆண்டுகளைப் போல்,ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழ் பதிவுக்காக வங்கிக் கிளைகளையும் அணுகலாம். ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளுக்குச் செல்லும்போது தங்களது ஓய்வூதியத் தொகை உத்தரவுஎண், ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அருகில் உள்ள பொதுசேவை மையங்களையும் அணுகலாம்.
மேலும், இந்திய தபால் துறையின் தபால் அலுவலக பேமென்ட் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று இந்த சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கான தகவல்களைப் பெறுவதற்கு அருகில் உள்ள தபால்அலுவலகங்களை ஓய்வூதியதாரர்கள் அணுகலாம். எனவே, உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அவசரம் காட்டுவதை ஓய்வூதியதாரர்கள் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை வருங்கால வைப்பு நிதி சென்னை (வடக்கு மற்றும் தெற்கு) மண்டல அலுவலக ஆணையர்-1, ரிதுராஜ் மேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT