Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகல் சங்கம் தொடங்குவதாக கூறி கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு

விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகியுள்ளார். அசோசியேஷன் தொடங்குவதாக கூறி தன்னிடம் எஸ்ஏசி கையெழுத்து வாங்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்தியதளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைநடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதற்கு விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ‘‘என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தந்தை -மகன் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற எனக்கு அவசியம் ஏற்பட்டதால் இதை செய்திருக்கிறேன். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அறிந்தேன். எங்கள் இடையே தனிப்பட்ட முறையில்எந்த மனஸ்தாபமும் இல்லை.நானும், விஜய்யும் கரோனா காலத்தில்கூட 2-3 முறை சந்தித்திருக்கிறோம், பேசியிருக்கிறோம்.

விஜய் பெயரில் நான் கட்சி தொடங்கவில்லை. அவரது பெயரில் 1993-ல் ஆரம்பித்த அமைப்பு, ரசிகர் மன்றமாக தொடங்கி, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அதில் உள்ள தொண்டர்கள் நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கட்சியை பதிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கெனவே கட்சி தொடங்குவதற்காக 2 முறைஎன்னிடம் கையெழுத்து கேட்டபோது, நான் போடவில்லை. இப்போதும் அசோசியேஷன் தொடங்குவதாக கூறியே என்னிடம் கையெழுத்து வாங்கி, என்னையும் அதில் பொருளாளராக சேர்த்திருக்கிறார். அவரது கட்சியில் நான் பொருளாளராக இல்லை. விலகிவிட்டேன்.

அரசியல் பற்றி பேசவேண்டாம் என்று எஸ்ஏசியிடம் விஜய் கூறியிருந்தார். எதிர்காலத்தில் அரசியல்கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஷோபா கூறியுள்ளார்.

கட்சி தொடங்கியதற்கு மகன்விஜய் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மனைவிஷோபாவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது, எஸ்ஏசிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x