Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் புரோஹித் சந்திப்பு

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து, தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு,புதிய கல்விக் கொள்கை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்து உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை ஆளுநர் புரோஹித் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நவ.4-ம்தேதி சந்தித்த ஆளுநர், தமிழகம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பிரதமர் அலுவலக இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் ஆளுநர் சந்தித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை 5-ம் தேதி (நேற்று)சந்தித்த ஆளுநர், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x