Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

கோவை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ம்தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நேற்று காலை மிதமான மழைபெய்தது. அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் நவ.4, 5, 6ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

4-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x