Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியை மணந்தார் மலாலா :

பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் மலாலா யூசுப்சாய், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் அதிகாரியான அஸர் மாலிக் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். அஸர் மாலிக்கும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று (நேற்று) திருமணம் செய்து கொண்டோம். பர்மிங்ஹாமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எளியமுறையில் திருமணம் நடந்தது.உங்களின் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து நடக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா பகுதியைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், சிறு வயதிலேயே பெண்கள் கல்விக்காக பாடுபட்டு வந்தார். இதனால் கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் அவரை சுட்டனர். அப்போது 15 வயதான மலாலா கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயிர் தப்பினார்.

இதன் பின்னர் தனது பெற்றோருடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது சமூக பணியை பாராட்டி கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x