Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுப்பது தொடர்பாக - ட்விட்டருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் :

புதுடெல்லி

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி ட்விட்டர் நிர்வாகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு கடந்த 25-ம் தேதியுடன் நிறைவடைந்து, புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

மத்திய அரசு விதிகளின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்து வாட்ஸ் அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனினும் மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு குறைதீர்க்கும் அலுவலர்களை நியமித்திருக்கிறது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள கூகுள், பேஸ்புக் ஆகியவை குறைதீர்க்கும் அலுவலர்களை பணியில் அமர்த்தியுள்ளன.

இந்த பின்னணியில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா, ட்விட்டர் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

அனைத்து சமூக வலைதளங்களுக்கும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. ட்விட்டர் மட்டும் ஏற்க மறுக்கிறது. அந்த நிறுவனம் இதுவரை குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்கவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, செய்தியாளர் சுவாதி சதுர்வேதி ஆகியோரின் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுகள் குறித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் குறைதீர்க்கும் அலுவலர் இல்லாததால் புகாரை பதிவு செய்ய முடியவில்லை. புதிய விதிகளை ஏற்க மறுக்கும் ட்விட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கோரியுள்ளார்.

இவ்வழக்கு நீதிபதி ரேகா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ட்விட்டர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஜன் பூவையா ஆஜரானார். அவர் கூறும்போது, "மே 28-ம் தேதி குறைதீர்க்கும் அலுவலரை நியமித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நீதிபதி கூறும்போது, "மனுதாரர் அமித் ஆச்சார்யாவின் மனு, புதிய ஒழுங்கு விதிகள்குறித்து ட்விட்டர் நிர்வாகம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

இதற்கு வழக்கறிஞர் சஜன் பூவையா பதில் அளித்தபோது, "ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. எனவே பதில் அளிக்க காலஅவகாசம் தேவை" என்று கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரேகா, "வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் ட்விட்டர் நிர்வாகம் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x