Published : 23 May 2021 05:49 AM
Last Updated : 23 May 2021 05:49 AM
கேரளா அமைச்சரவையில் முதல்முறையாக பெண் பத்திரிகையாளர்வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆட்சியை தக்கவைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் தலைமையிலானஅரசு கடந்த வியாழக்கிழமை பதவியேற்றது. இவரது அமைச்சரவை யில் புதுமுகங்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு கரோனாவுக்கு எதிரான போரில்சுகாதார அமைச்சராக இருந்த ஷைலஜா முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது மிகுந்தசர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷைலஜா வகித்த சுகாதார அமைச்சர் பதவி, கேரளாவில் அரசியல்வாதியாக மாறிய முதல் பெண் பத்திரிகை யாளரான வீணா ஜார்ஜுக்கு (45)வழங்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும், ஆறன்முளா தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றார் வீணா ஜார்ஜ். தற்போது அதே தொகுதியில் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதும் அவரது தேர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2018, 2019-ல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் வீணா திறம்பட செயல்பட்டது பெரிதும் பாராட்டப்பட்டது.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன் 15 ஆண்டுகளுக்கும் மேலாகபிரபல மலையாள டி.வி. சேனல்களில் பணியாற்றியுள்ளார். செய்திவாசிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விவாதங்களின் நெறியாளர் என பன்முகத் திறமையை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சிறந்த பத்திரிகையாளருக்கான பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். தென்னிந்தியாவில் அமைச்சராக பதவியேற்ற முதன் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
எம்.எஸ்சி. (இயற்பியல்) மற்றும்பிஎட் முடித்துள்ள வீணா, தனதுஅரசியல் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்அணியான எஸ்எப்ஐ-யில் தொடங்கினார். ஊடகத் துறையில் சேர்வதற்கு முன் சிறிது காலம்ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப், பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT