Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது : மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சில மாநிலங்கள் தொடங்கியுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரித்து வருகிறோம். மே 1-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான பணிகளை பல மாநிலங்கள் இன்று தொடங்கிவிட்டன. ஆனால் சில மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டும் 45 வயதுக்குட்பட்டும் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவதில் சிரமம் உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இதனிடையே தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கு பல்வேறு மாநில அரசுகள் ஆர்டர் கொடுத்துள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ள போதிலும் வேகம்பெறவில்லை. அடுத்த சில நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

டெல்லி, ஒடிசா, உத்தராகண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்களிடம் போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்று கூறி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இன்னும் தொடங்கவில்லை.

சில மாநிலங்களில் இந்த பணி நாளை (மே 2) தொடங்கும் என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசுகள் மானியம் வழங்கவேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டம் வேகம்பெறும். அதே நேரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும்.

இதுவரை மாநில அரசுகளுக்கு 15 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x