Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர், கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2005-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின், குழந்தையை பராமரிக்க பணம் வழங்க கோரி பாகல்கோட் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், ஆண் குழந்தை யின் பராமரிப்பு செலவுக்கு 18 வயதாகும் வரை மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. அந்த உத்தரவை 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்த ஊழியர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கு விசாரணையின்போது, ‘‘தற்போது நான் 2-வது திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதந் தோறும் ரூ.20 ஆயிரத் துக்கு சற்று அதிகமாகதான் சம்பாதிக்கிறேன். இதில் ரூ.20 ஆயிரத்தை முதல் மனைவியின் குழந்தையை பராமரிக்க கொடுத்தால், என் குடும்பத்தை கவனிக்க இயலாது. மேலும், முதல் மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது’’ என்று ஊழியர் கூறினார்.
முதல் மனைவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பராமரிப்பு தொகையை குறைத்து கொள்ள சம்மதிக்கிறோம். ஆனால், குழந்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை வேண்டும்’’ என்று கூறினார்.
அதன்பின் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘முதல் மனைவியின் குழந்தையை பராமரிக்க மார்ச் 1, 2021-ம் தேதி முதல் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் அந்தக் குழந்தை கல்லூரி படிப்பை முடிக்கும் வரை தந்தை உதவி செய்ய வேண்டும். பட்டப் படிப்பு முடிப்பதற்கு பொருளாதார ரீதியாக தந்தை உதவி செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT