Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

போர் விமானங்களை தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் ஹெச்ஏஎல் ஒப்பந்தம்

புதுடெல்லி

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இரு நிறுவனங்களும் இணைந்து விமான தயாரிப்பில் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

விமானப் படைக்குத் தேவையான விமானங்களைத் தயாரிக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும் அதிநவீன போர் விமானங்களைத் தயாரிக்கிறது. இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளதால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடியஅதிநவீன விமானங்களைத் தயாரிக்க வழி ஏற்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஏஎல்-லுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இத்துறையில் புதிய விமானங்கள் தயாரிப்புக்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் ஜேஆர் மெக்டொனால்டு தெரிவித்தார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குத் தேவையான விமானங்களைத் தயாரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தும் என ஹெச்ஏஎல் தலைவர் ஆர். மாதவன் தெரிவித்துள்ளார். `மேக் இன் இந்தியா'திட்டம் மற்றும் `ஆத்ம நிர்பார்பாரத்' உள்ளிட்ட சுய சார்பு இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் திகழும் என மாதவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x