Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
கிரிப்டோ கரன்சி மசோதாவை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
நாட்டில் கிரிப்டோ கரன்சி மீது தடை விதிக்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என பாஜக உறுப்பினர் கே.சி. ராமமூர்த்தி மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
கிரிப்டோ கரன்சி மசோதா உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
2018-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனைத்து வகையான கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்வதாக அறிவித்தது. ஆனால் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த தடையை நீக்கியது.
பிட் காயின் உள்ளிட்ட மெய் நிகர் கரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இவற்றின் மீது ரிசர்வ் வங்கி விதித்ததடை ஓரளவுதான் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது., கிரிப்டோ கரன்சி என்பது வடிவம் இல்லாதது.
கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த சட்டரீதியான அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கோ அல்லது செபி அமைப்புக்கோ இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் மூலம் இது போன்ற மெய்நிகர் கரன்சி புழக்கத்தை கட்டுப்படுத்த வழியில்லை. இது தொடர்பாக அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டு அக்குழுஅரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாகக் கொண்டு வரப்படும் என்று தாக்குர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT