Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM
திருவனந்தபுரம் மாநகர மேயராக 21 வயதான, பிஎஸ்சி கணிதவியல் மாணவி ஆர்யா ராஜேந்திரன் நேற்று பதவியேற்றார். நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வென்றன. மற்றவர்கள் 5 இடங்களில் வென்றனர்.
இதையடுத்து மேயர் வேட்பாளராக முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்ற 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. திருவனந்தபுரம் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இவர் பிஎஸ்சி கணிதவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆர்யா ராஜந்திரன் 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 35 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் 9 வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஒரு கவுன்சிலர் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதால் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை.
இதையடுத்து திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார். அவரது பெற்றோரும் மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட கால தொண்டர்களுமான ராஜந்திரன், லதா ஆகிய இருவரும் மேடைக்கு அருகில் பெருமையுடன் நின்று தங்களின் இளைய மகள் மேயராக பதவியேற்பதை கண்டு பூரிப்பு அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT