Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

பிலிப்பைன்ஸில் புயலால் 67 பேர் பரிதாப உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரத் தாண்டவமாடிய புயலால் 67 பேர் உயிரிழந்தனர். 12 பேரை காணவில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பல்வேறு தீவுகள் அடங்கிய நாடாகும். அந்த நாட்டில் 7,600-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 20 புயல்கள் கடந்து சென்றுள்ளன. 21-வது புயலாக 'வேம்கோ', கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் ககாயன் பள்ளத்தாக்கு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். லூஸான், தலைநகர் மணிலா பகுதிகளிலும் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 26,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பிலிஸ்பைன்ஸ் முழுவதும் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

புயல் பாதித்த பகுதியில் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். அந்த நாட்டின் துணை அதிபர் லெனி, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

பிலிப்பைன்ஸில் கோரத் தாண்டவமாடிய 'வேம்கோ' புயல் தற்போது வியட்நாம் நாட்டில் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்த நாட்டின் குவாங் பின், ஹா டின் பகுதிகளை சேர்ந்த சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x