Last Updated : 02 Nov, 2021 03:11 AM

 

Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM

கை அசைவுக்கேற்ப சிறகுகள் விரிக்கும் வகையில் - சென்சாரில் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ, வண்ணத்துப் பூச்சி : பார்வையாளர்களைக் கவர ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் புதிய வசதிகள்

ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களின் கை அசைவுக்கேற்ப சிறகுகள் விரிக்கும் வகையில் சென்சாரில் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் அமைக்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் ரங்கம் அருகே மேலூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 125-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதுதவிர குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை குடில்கள், செயற்கை நீரூற்றுகள், நீர் தாவரங்களைக் கொண்ட குட்டைகள், சிறு மரப்பாலங்கள், குழந்தைகளுக்கான படகு குழாம், பல்வேறு வகையான தாவர வகைகளுடன் உள்ள நட்சத்திரவனம், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சிக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பார்வையிட தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதற்கேற்ப இங்கு புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தரும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் குழந்தைகளுக்கான ரயில், பேட்டரி கார், குழந்தைகளுக்கான பலூன் விளையாட்டுகள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி

அதைத்தொடர்ந்து பார்வையாளர்களின் கை அசைவுக்கேற்ப சிறகுகளை விரிக்கும் வகையில் சென்சார் மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரானிக் தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் தற்போது வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் ஒரு எலெக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சியை ‘ஆம்பி தியேட்டரின்' முன்புறத்திலும், மற்றொரு எலெக்ட்ரானிக் வண்ணத்துப் பூச்சியை, விளக்க மையத்தின் முன்பகுதியிலும் பொருத்தும் பணிகள் வனச் சரகர் சரவணக்குமார் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பார்வையாளர்களை மகிழ்விக்கும்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கிரணிடம் கேட்டபோது, ‘‘வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அவ்வப்போது புதிய புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான், அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்க்க முடியும். மேலும், ஏற்கெனவே இங்கு வந்து பார்த்துச் சென்றவர்கள்கூட, புதிய அனுபவத்துக்காக மீண்டும் வருகை தருவார்கள். அதன்படி, தற்போது சென்சார் மூலம் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் நீல மயில் அழகன், இச்சை மஞ்சள் அழகி இனங்களைச் சேர்ந்த எலெக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைகால விடுமுறைக்காக வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், ஈர்க்கக் கூடியதாகவும் இவை இருக்கும். அதற்கேற்ப பணிகளை விரைந்து மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x