Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

கடந்தாண்டு அவலம் நடப்பாண்டும் தொடர்கிறது - புதுச்சேரியில் பாடபுத்தகங்கள் வழங்காததால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி :

புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து3 வாரங்களை கடந்தும், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கு தளர் விற்குப் பின், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு முழுநேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டு, மதிய உணவும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 வாரங்களை கடந்த நிலையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. பழைய புத்தகங்கள் மற்றும் ஜெராக்ஸ் நகல்களைக் கொண்டு மாணவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்ட்டு மதியம் வரை இயங்கி வருகிறது. பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் ஆக உள்ள நிலையில் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டும் பெரும்பாலான பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் முன்னாள் மாணவர்களிடமும் புத்தகங்கள் வாங்கி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பயில முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுத்தேர்வு, நீட் தேர்வுகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.கிராமப்புற மாணவர்கள் ரூ.40 முதல் 80 வரை நாள் ஒன்றுக்கு பேருந்துக்கு செலவிட வேண்டியதாக இருக்கிறது. மதிய உணவு இல்லாமல் பசியுடன் வீடு திரும்பும் நிலையே தொடர்கிறது’‘ என்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் இருந்து தான் புதுச்சேரிக்கு பாடநூல் வர வேண்டும். தற்போது 50 சதவீதம் பாடநூல்தான் வந்துள்ளது. அவற்றை இன்று முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம். மீதியுள்ள 50 சதவீத நூல்கள் விரைவில் வரவுள்ளது.

மாணவர் சிறப்பு பேருந்துக்காக 5 ஆண்டுகள் போடப்பட்ட டென்டர் முடிந்து விட்டது. புதிதாக டென்டர் போட அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும். கரோனா தொற்று காரணமாக மதிய உணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. புதுச்சேரியில் அட்சய பாத்திரம் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் மூலமும், காரைக்கால், மாஹே, ஏனாமில் கல்வித்துறை மூலமும் அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x