Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வலகாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). தனியார் நிறுவன ஊழியர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மாரண்டஅள்ளியில் உள்ள 2 தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் கார்த்திக் உடல், தருமபுரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சையளிக்கப்பட்டதால் தான் கார்த்திக் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த ஹோமியோபதி மருத்துவர்கள் கோவிந்தராஜ் (45), சந்தோஷ்குமார் (35) ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் 2 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து பாலக்கோடு வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர், 2 கிளினிக்குகளுக்கும் சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT