Published : 15 Jul 2021 03:14 AM
Last Updated : 15 Jul 2021 03:14 AM

200 பேர் முதல் 3,500 பேர் பங்கேற்கும் உள் அரங்குகள் - ரூ.47 கோடியில் பிரமாண்டமாக தயாராகும் தமுக்கம் கலாச்சார மையம் : 591 கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி

மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 47.72 கோடியில் பிரம்மாண்ட கலாச்சார மையம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்த வளாகத்தினுள் சிறப்பு விருந்தினர் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு இன்றி வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும் பாதைகள், சாய்வு தளம் குறித்தும், தீயணைப்பு வாகனம் எளிதில் வந்து செல்வது குறித்தும், மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

விரைவில் இந்த கலாச்சாரம் மையம் திறக்கப்பட உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமுக்கம் மைதானத்தில் மொத்தம் உள்ள 9.68 ஏக்கர் பரப்பரளவில், சுமார் 2.47 ஏக்கரில் தரைமட்டத்துக்குக் கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் தரைமட்டத்துக்கு கீழுள்ள தளத்தில் 234 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 357 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், தொழில் மற்றும் வர்த்தக பொருட்காட்சி நடத்தவும், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும், 200 பேர் முதல் 3500 பேர் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு அளவில் உள் அரங்கத்தை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கலாச்சார மையம் திறக்கப்பட்டால் நகர் பகுதியில் உள்ள பல்வேறு தனியார் திருமண மண்டபங்கள், மால்களில் மிக அதிக கட்டணம் கொடுத்துச் செல்வதை தவிர்த்து மாநகராட்சியின் இந்த மையத்தை நாடி வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x