Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM
தடுப்பூசி செலுத்தும் விவரங்களை ஒரு நாளைக்கு முன்பே மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என துணை சுகாதார இயக்குநருக்கு கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கடிதம் அனுப்பியுள் ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகாலை முதலே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர்.
பல மணி நேரம் காத்திருந்த பிறகு, சுகாதார பணியாளர்கள் வந்து தடுப்பூசி இன்று செலுத்தப்படவில்லை என்று மக்களிடம் தெரிவிக்கின்றனர். எந்த வயதினருக்கு, எந்த தடுப்பூசி, எங்கெல்லாம்செலுத்தப்படுகிறது என்ற முறையான தகவல் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவதில்லை. ஊடகங்களுக்கு அளிக்கும் அறிக்கையை இரவில் நேரம் கடந்து அளிக்கின்றனர். அந்த தகவல் பலரை சென்றடைவதில்லை.
எனவே, ஒரு நாளைக்கு முன்னரே தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் மருத்துவ பணியாளர்களும் சிரமப் படுகின்றனர்.
தடுப்பூசி இல்லை எனும்போது மக்கள் கோபமடைகின்றனர். மேலும், டோக்கன் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவ தாகவும் சில இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, டோக்கன் வாங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை நகலை பெற்று அதில் ‘சீல்’ வைத்து டோக்கன் எண் எழுதி தர வேண்டும். அந்த நகலை கொண்டுவருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT