Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் குறைந்தது : முதியவர்கள் உட்பட 210 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குள் குறைந்தது. நேற்று ஒரேநாளில் முதியவர்கள் உட்பட 210 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்5,013, பெண்கள் 4,105 என மொத்தம் 9,118 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,227,ஈரோட்டில் 1,041, சென்னையில் 559 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 97,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 5 லட்சத்து 15,199 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 22 லட்சத்து 66,793 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் கோவையில் 2,787, சென்னையில் 2,367 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 22,720 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சிகிச்சையில் 1 லட்சம் பேர்

கோவையில் 12,820, திருப்பூரில் 11,039, ஈரோட்டில் 9,709, சென்னையில் 4,683 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 523பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 210 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 33 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,953 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 27,835, கோவையில் 2 லட்சத்து 9,481, செங்கல்பட்டில் 1 லட்சத்து 53,095,திருவள்ளூரில் 1 லட்சத்து 8,863என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 273 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 55,350 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 75,010 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1.50 லட்சம் வாகனம் பறிமுதல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வருகிற 21-ம் தேதி வரைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பெரும்பாலான சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஏராளமானவர்கள் பயணிக்க தொடங்கினர். போலீஸார் பெரிய அளவில் கெடுபிடிகள் எதுவும் காட்டவில்லை.

இந்நிலையில், கடந்த சிலநாட்களாக சாலைகளில் ஆங்காங்கே நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, இ-பதிவு போன்ற முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் மற்றும் பந்தல் அமைத்து போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். தற்போது மாலை 5 மணிக்கு பிறகும், இரவிலும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 36 நாட்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 69 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 14 லட்சத்து 73 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதுதமிழகம் முழுவதும் 77 ஆயிரத்து 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x