Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

ராஜஸ்தானில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ புகார் :

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கட்சியின் எம்எல்ஏவும் சச்சின் பைலட் ஆதரவாளருமான வேத் பிரகாஷ் சோலங்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக காங்கிரஸின் முக்கிய தலைவரான சச்சினும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். பின்னர், கட்சி மேலிடம் தலையிட்டு சமரசம் செய்தது. இருந்தும் ராஜஸ்தான் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. சச்சின் பைலட் பாஜகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், அதை சச்சின் பைலட் மறுத்தார்.

இந்நிலையில், சச்சின் பைலட் ஆதரவாளரும் ஜெய்ப்பூர் மாவட்டம் சாக்சு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான வேத் பிரகாஷ் சோலங்கி கூறுகையில், ‘‘சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால், சில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது. இதுகுறித்து அந்த எம்எல்ஏக்கள் முதல்வர் அசோக் கெலாட்டிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’’ என்றார். சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி, ‘‘இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஒரு பொறுப்புள்ள எம்எல்ஏ ஆதாரங்களுடன் பேச வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x