Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் மின்சார தேவை குறைந்து, காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் காரணமாக மின்சார தேவை அதிகரித்தது. இதனால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை இயங்கவில்லை. இதனால், மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில், தென்மேற்கு பருவ மழை தொடங்கஉள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தியது.
அதன்பேரில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1, 2, 3 மற்றும் 4 ஆகிய 4 அலகுகளிலும் 840 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5-வது அலகு மட்டும் தற்போது இயங்கி வருகிறது.
மின் தேவை குறைவு காரணமாகவே 4 அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின் தேவை அதிகரிக்கும்போது அரசின் அறிவுரைப்படி இந்த அலகுகள் மீண்டும் இயக்கப்படும் என, அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT