Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
ராணிப்பேட்டை: லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்டதாக உள்ளது. இங்குள்ள புதிய கட்டிடத்தில் 15 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் புதிய கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்துக்கு மிக அருகே குடியிருப்புகள் உள்ளன. இடையில் எந்த பாதுகாப்பு தடுப்புச் சுவரும் இல்லாததால் கரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகே உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும் என்றும் இதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்ததுடன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்குமாறு தெரிவித்தனர். இதனையேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT