Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

சட்டப்பேரவை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான - தேர்தல் பிரச்சாரம் இன்று : இரவு 7 மணியுடன் ஓய்கிறது : வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேற உத்தரவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாதோர், தொடர் புடைய தொகுதிகளில் இருந்து வெளி யேற தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியா குமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள் ளது. இத்தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை யாகவும் 10,830 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவையாகவும் தேர்தல் ஆணை யத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான 1 லட்சத்து 55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந் திரங்கள், 1 லட்சத்து 20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் 3 கோடியே 8 லட்சத்து 38,473 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 18 லட்சத்து 28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74,446 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக் கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. அதனால் 4-ம் தேதி இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர் பான எந்தஒரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங் கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

வாட்ஸ்அப், முகநூல்

எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ, தேர் தல் தொடர்பாக பரப்புரை செய்யவோ கூடாது. இந்த விதிமுறைகள் மீறப் பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியில் வாக் காளர்கள் அல்லாதோர் 4-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 4-ம் தேதி இரவு 7 மணி முதல் செல்லாது.

வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது சொந்த பயன் பாட்டுக்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் மற்றும் கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி பெற உரிமை உண்டு.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும் வாக்குச் சாவடி களில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் கட்சியினர் வாகனங்களை பயன்படுத்த எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலை வுக்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x