Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

சட்டப்பேரவை தேர்தலையொட்டி - மாம்பலம், அண்ணா நகரில் கொடி அணிவகுப்பு : போலீஸார், துணை ராணுவ படையினர் பங்கேற்பு

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சென்னை மாம்பலம், அண்ணா நகரில் காவல் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, மக்கள் கூடும் இடங்கள், வசிப்பிட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள், போலீஸார், பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் இதில் பங்கேற்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தியாகராய நகர் காவல் சரக உதவிஆணையர் கலியன் தலைமையில், மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார், துணை ராணுவப் படையினர் பங்கேற்ற காவல் கொடி அணிவகுப்பு நேற்று காலை நடைபெற்றது.

மாம்பலம் காவல் நிலைய எல்லையில், தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் தொடங்கி, புதிய போக் சாலை, பர்கிட் சாலை, தெற்கு போக் சாலை, மேட்லி சாலை வழியாக சென்று மாம்பலம் காவல் நிலையத்தில் அணிவகுப்பு முடிவடைந்தது.

அண்ணா நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சரக உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. அண்ணா நகர் 6-வது அவென்யூவில் தொடங்கி, எம்ஜிஆர் காலனி, மூவேந்தர் நகர், ஈவிஆர் சாலை, 100 அடி சாலை, எம்எம்டிஏ பிரதான சாலை வழியாக சென்று அரும்பாக்கம் காவல் சிறார் மன்றம் அருகேஇந்த காவல் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x