Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
திருத்தணி அருகே பட்டாபிராமபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய சம்பவத்தில், தந்தை, மகன் என இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ள ஆட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(45). இவர் நேற்று முன் தினம் பகலில், தன் மனைவி சுமதி(35), மகன் பரத்குமார்(17) ஆகியோருடன், செங்கல்பட்டில் நடந்த உறவினர் இல்ல நிகழ்வுக்கு சென்றார்.
அப்போது, சீனிவாசன் உள்ளிட்ட 3 பேரும், வீட்டிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் திருத்தணி சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் செங்கல்பட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு திருத்தணி வந்த சீனிவாசன் குடும்பத்தினர், திருத்தணியிலிருந்து, ஆட்ரம்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிள், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே பட்டாபிராமபுரத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாய் படுகாயம்
திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், சுமதி ஆகியோரில், நேற்று முன் தினம் நள்ளிரவில் பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, சுமதி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT