Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

திமுகவை வீழ்த்துவதே இலக்கு டிடிவி.தினகரன் உறுதி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவை நேற்று சந்தித்தார். அப்போது இருவரும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எங்கள் தலைமையிலான கூட்டணிக்காக நாங்கள் பல கட்சிகளுடன் பேசி வருகிறோம். விரைவில் முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். எங்களது ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான். திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டு பாஜக, அதிமுக என யார் வந்தாலும் அவர்களை ஏற்க தயாராக இருக்கிறோம். கூட்டணி குறித்து இரண்டொரு நாளில் தெரியவரும்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் குறி. அது எந்த அம்பில் வீழ்ந்தாலும் சரிதான். அதிமுகவை மீட்டெடுக்க ஜனநாயக முறையில் தேர்தல்தான் அதற்கு சரியான களம் ஆகும்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு சுமூகமான முறையில் அணுக வேண்டும். தேவையில்லாமல் அண்ணன், தம்பிகளாக வாழும் சமுதாய மக்களிடத்தில் சண்டையை உருவாக்கி ஏதோ ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக இந்த இடஒதுக்கீடு அறிவிப்பைக் கொடுத்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஒரு சாதிக்கு கொடுக்கக்கூடாது என்பதல்ல. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் இடஒதுக்கீடு பங்கீடு இருக்க வேண்டும். அதனால் ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக்கூடாது. தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் விளைவு, தலையில் இடி இறங்கியதுபோல இறங்கப் போகிறது என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x