Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றலாம் அண்ணா பல்கலை.க்கு உயர் நீதிமன்றம் யோசனை

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தலாம். அடுத்த ஆண்டு முதல்மத்திய அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து மேற்கண்ட படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலிஉள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப் போகிறீர்கள், இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்துவதற்கு என்ன செய்வது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘‘இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்திவிட்டு, அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதி, 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது. இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இடஒதுக்கீடு பிரச்சினைக்கு திசைமாறிச் செல்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா? இந்த ஆண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் பல்கலைக்கழகத்துக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்’’ எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, "மத்திய அரசு இந்த படிப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதால் 49.5 சதவீத இடஒதுக்கீட்டைத்தான் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசு வழக்கறிஞர் பிரகதீஷ் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ‘‘இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவும், எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்தும் வரும் 18-ம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x