ரூ.100 கோடி நிலப்பதிவு பின்னணியில் யார்? - 7 நாளாக தீவிர விசாரணை தொடர்ந்தும் விடை இல்லை!

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம். (உள்படம்) ஜஸ்டின் மணிகண்டன், சசிகலா

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம். (உள்படம்) ஜஸ்டின் மணிகண்டன், சசிகலா

Updated on
2 min read

பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலப்பதிவு முறைகேடு குறித்து 7 நாட்கள் சிபிசிஐடி, பதிவுத்துறை உயர் அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தியும் இன்னும் மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகாதது புரியாத புதிராக உள்ளது.

பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்பாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் பழநி தேவஸ்தானத்துடன் இணைத்து நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டன.

இதையடுத்து, பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை மீட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தம் அமைத்து, பயன்பாட்டில் உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.

கடந்த ஜூலை 6-ம் தேதி பொறுப்பு வகித்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை அடுத்த பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழநி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவ​காரம் தொடர்பாக சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்டப் பதி​வாளர் சசிகலா ஆகியோர் பணியிடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்ட னுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

7-வது நாளாக விசாரணை

இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதேபோல், நேற்று 2-வது நாளாக பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவை சேர்ந்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத்துறை தலைவர் பூங்கொடி, சென்னை மாவட்ட பதிவாளர் கண்ணன் ஆகியோர் பழநி பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

7-வது நாளாக திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி முருகன் கோயில் அப்போதைய இணை ஆணையரும், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையருமான மாரிமுத்து, நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் உட்பட 5-க்கும் மேற்பட்டோரிடம்

எஸ்பி ஷாஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் விசாரணை நடத்தினர். சாட்சி கையெழுத்திட்டவர்கள், புரோக்கர்களாக செயல்பட்ட வர்கள் என பல்வேறு தரப்பிலும் விசாரணை, வீடுகளில் சோதனை என நடவடிக்கைகள் தொடர்கின்றன.

வங்கியில் பணமே இல்லை

இந்த நிலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்த மான நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகியோர் ரூ.2 கோடிக்கு காசோலைகள் கொடுத்துள்ளனர். தற்போது அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற காசோலைகளை நிலம் விற்பவர்கள் ஏற்றுக்கொள் வதில்லை. பதிவாளரும் வங்கி கணக்கில் பணம் வரவாகியுள்ளதா என்பதை ஆய்வு செய்வது வழக்கம். இது எதுவும் நடக்காததால் கூட்டு சதி இருந்துள்ளது தெரிகிறது.

நிலத்தை வாங்கியவர்கள், விற்பவர், பதிவு செய்தவர், ஆவணங்கள் என அனைத்து விவரங்கள் இருந்தும், கடந்த 7 நாட்களாக நடைபெற்று வரும் போலீஸ் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. நிலம் வாங்கியவர்களின் பின்னணி, பதிவு செய்த அதிகாரிக்கு பின்னணியில் யாரும் இருந்தனரா என்ற 2 விஷயங்கள் மட்டுமே மிக முக்கியமானது.

பதிவாளரிடம் விசாரிக்கப் பட்டு விட்டது. அலுவலகத்தில் நடந்த அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் பெறப்பட்டுள் ளன. எனினும் பத்திரப்பதிவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.

உயர் அதிகாரி யாரும் இருக்கிறாரா என்ற கேள்விக்கும் விடையில்லை. அதேபோல் நிலத்தை வாங்கியவர்கள் செல்வந்தர்கள் இல்லை என்பதும், பினாமி போல் செயல்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் பின்னணியில் செல்வாக்கை காட்டியதும், கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியதும் யார் என்பது தெரிய வேண்டும்.

இதன் பின்னணியில் மிக முக்கிய, செல்வாக்கு பெற்ற யாரும் இருக்கிறார்களா எனற விவரத்தை காவல் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளால் இதுவரை கண்டறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியி ருந்தும் ஏன் இந்த வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே விசாரணை நீடிக்கும் என தெரியவில்லை. உரியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

<div class="paragraphs"><p>பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம். (உள்படம்)&nbsp;ஜஸ்டின் மணிகண்டன்,&nbsp;சசிகலா</p></div>
நாடு முழுவதும் 1500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: 6 மாத ரகசிய கண்காணிப்புக்கு பின் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in