

சோமனூர் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடம்.
கோவை: பல ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தால், விசைத்தறியாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி, சுமார் 4 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றன.
1990-ம் ஆண்டு முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி ஒப்பந்தம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் போராடும் நிலைமை உள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 90 சதவீதம் சாதா விசைத்தறிகள் மூலம் கூலி அடிப்படையில் நெசவு செய்து வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர் களிடம் இருந்து பாவு நூல் பெற்று, கிரே காடா துணிகள் உற்பத்தி செய்கிறோம்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வை ஜவுளி உற் பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகிறோம். ஆனாலும், கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு எங்களுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை.
ஒப்பந்தப்படி கூலி உயர்த்தப்பட்டாலும், மார்க்கெட் நிலைமை சரியில்லை எனக் கூறி, பழைய கூலியே திரும்பத் திரும்ப வழங்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக உரிய கூலிக்கு போராடி வருகிறோம். ஒரு மீட்டர் துணி நெய்வதற்கு ரூ.4 முதல் ரூ.6 வரை ரகங்களுக்கு ஏற்ப விசைத்தறியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் இந்த கூலியில் மீட்டருக்கு 25 பைசா முதல் 50 பைசா வரை குறைத்து வழங்குவதால், பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தியில் ஈடுபடும் விசைத்தறியாளர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே, உரிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பெற்றுத்தந்தால் மட்டுமே இந்த தொழிலின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் நெசவு கூலியை குறைத்து வழங்கும்போது, அதன் முழு சுமையையும் விசைத்தறியாளர்களே ஏற்கும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்ட நெசவுக்கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சில இடங்களில் மறுத்து வருகின்றனர். சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தக் கூலியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விசைத்தறியாளர்கள் கூறும்போது, “தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர்களின் வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது.
இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வேறு தொழிலுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். உரிய கூலியை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.