Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18
Updated on
5 min read

“ஒவ்வொரு நிழலுக்கும் ஒரு கதை இருக்கும், ஒவ்வொரு பேயும் ஒரு கதை சொல்லும்” என்கிற கிராமத்து சொலவடையை நீங்கள் காத்துவாக்கில் கேட்டிருக்கலாம். அதைக் கேட்டு, “என்னது நிழலுக்கு பின்னாடி கதையா? ஒரு பேயே கதை சொல்லுமா?!” என்று ‘சந்திரமுகி’ வடிவேலு மாதிரி பீதியும் ஆகியிருக்கலாம் அல்லது “இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கிறது?” என்று பகுத்தறிவும் பேசியிருக்கலாம்.

கடவுளைப் போலவே இந்த பேய், பிசாசுகளும், ஏலியன்களும் என்றைக்கும் சுவாரஸ்யமான விவாதப் பொருள்தான். (பொறுப்பு துறப்பு: யாருடைய நம்பிக்கையையும் குறைத்து மதிப்படவில்லை)

அந்த வகையில், இந்த அத்தியாயத்தில் நாம் ஒரு பேய்க்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யக் கதையைப் பற்றிதான் பேசப் போகிறோம். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே, அப்படி பானு என்ற பெண்ணுக்காக மனமிறங்கிய பேய் சுலோச்சுனா பற்றியதுதான், கன்னடத்தில் 2025-ல் வெளியான திரைப்படம் ‘சு ஃப்ரம் சோ’ (Su from So - சுலோச்சனா ஃப்ரம் சோமேஸ்வரா).

அறிமுக இயக்குநர் ஜே.பி.தும்மினாட் அதகளம் செய்திருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தை ஒரு காமடி ஹாரர் மற்றும் சோஷியல் டிராமா ஜானர் என்று வரையறுக்கலாம். படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் இயக்குநர் ஜே.பி.தும்மினாட், ஷனீல் கவுதம், சந்தியா அரகரே மற்றும் ராஜ் பி ஷெட்டி நடித்துள்ளனர். ஜியோ - ஹாட்ஸ்டார் ஓடிடி ப்ளாட்ஃபார்மில் காணக் கிடைக்கிறது.

ஒரு கிராமத்து இளைஞன் தான் செய்த தவறை மறைக்க தனக்கு பேய் பிடித்துவிட்டதாகச் சொல்கிறான். அந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த கிராமத்தின் பிரச்சினையாக மாறிப் போகிறது. பேயோட்ட ஒரு போலிச் சாமியார் என்ட்ரி கொடுக்க, பேயின் பெயர் சுலோச்சனா, பூர்விகம் சோமேஸ்வரா எனச் சொல்லும் உற்றார், உறவினர்களிடம், “அந்த சுலோச்சனாவை கூட்டி வாருங்கள்” என்கிறார்.

கிணறுவெட்ட பூதம் கிளம்பியது போல, சுலோச்சனா மரித்துப்போய் ஆண்டுகள் ஐந்தாகிவிட்டது எனத் தெரிய வருகிறது. அப்புறம் சுலோச்சனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அசோகா (ஜே.பி.தும்மினாட்) என்ன ஆகிறான். அவன் ஏன், எதற்காக பானுவைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் மீதிக் கதை. சிரிப்பின் ஊடே சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்.

மனசாட்சியுள்ள ஒரு மனிதனை குற்ற உணர்வு போல் வேறேதும் ஆட்டிப்படைக்க முடியாது. அது முதலில் அந்த நபரின் சுயத்தில் கவனம் செலுத்தச் செய்யும். அந்தக் கவனம் சுய திருத்தத்துக்கு வழிகோலும். மனச் சுமை குறையும்போது சிந்தை தெளியும், அடுத்ததாக பிராயச்சித்தமும் தேடச் சொல்லும்.

இந்தப் படம் அசோகா தேடும் பிராயச்சித்தம். அசோகா போல் சின்னப்புத்தி செயல்களைச் செய்த, செய்யத் துணியும் ஆண்கள் சுய திருத்தம் நோக்கி நகர உதவும் வழிகாட்டி.

இந்தியச் சினிமாவில் அநியாயமாக உயிரைவிடும், அநீதியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் செய்வது என்னவோ பேயாகத்தான் இருக்கின்றன. ஹாரர் காமெடி, பேராநார்மல், சூப்பர்நேச்சுரல், சைக்கலாஜிக்கல் ஹாரர் என்று ஏதேனும் ஜானரில் பெண்களுக்குக் குரல் திகில் படங்களுக்குக் குறைவில்லை.

‘சு ஃப்ரம் சோ’-வில் தனக்கு நடக்கும் அநீதியை உற்றார், உறவினர், சுற்றத்தார் என யாருமே தட்டிக் கேட்காமல் விட்டுவிடும் சூழலில், காயப்பட்டு வெம்பி “பிறந்துவிட்டோமே! இருக்கத்தான் வேண்டும்!” என்று காலந்தள்ளும் பானு என்ற அபலைக்கு பேயுருவில் கருணை காட்டும் தாயாகிறான் அசோகா.

ஆரம்பத்தில் அசோகா தன் வயது சிநேகிதர்களுடன் ஊரில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளுக்குச் சென்று குடித்து கும்மாளம் போடுவது, செல்போனில் நண்பர்களுடன் ஆபாசப் படங்களைப் பகிர்ந்து கொள்வது, பார்த்தவுடன் காதல் வகையறாவில் விழுந்து ஊரில் ஒரு பெண்ணுக்கு ரூட் விடுவது என்று திரிகிறான்.

நான்கு இளைஞர்கள் சேர்ந்தால் அங்கே பேசுபொருள் அவர்கள் அறிந்த / அறிய விரும்பும் பெண் நிச்சயம் இருப்பாள் என்பார்கள். அப்படித்தான் அந்த ஊரின் இளம்பெண்களில் ஒருத்தியாக சைத்ரா (தனிஷ்கா ஷெட்டி) மீது பலருக்கும் பித்து இருக்கிறது. அந்தப் பித்து முற்றியவன்தான் நம்ம அசோகா. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்று இருவருமே கண்ணாலே காதல் கவிதை சொல்லித் திரிகிறார்கள்.

ஒருநாள் ஒரு திருமண நிகழ்வுக்கு கூடி பீர் குடித்து ‘தாக சாந்தி’ செய்து கொண்டிருக்கும் அசோகா அண்ட் கோ பேச்சு சைத்ரா பக்கம் திரும்புகிறது. அவளின் ஆரம்பகால தோற்றத்தின் பாடி ஷேமிங் தொடங்கி தற்கால தோற்ற வர்ணனை வரை அது நீள்கிறது. அசோகா அந்த மாதிரியான கமென்ட்டுகள் அடிக்காதவன் அல்ல. ஆனால், தனக்குப் பிடித்தமான பெண் பற்றியது என்றதும் பதறிப்போய், அங்கிருந்து விலகிச் செல்கிறான்.

ஆண்கள் தங்கள் காதலி, மனைவி, சகோதரி, மகள் என யாரிடமாவது நீ இந்த மாதிரி உடையணியாதே, இப்படிச் சத்தமாக சிரிக்காதே, இந்த நேரம் வெளியில் திரியாதே, இத்தனை பளிச் என்று ஒப்பனைகள் செய்து கொள்ளாதே என்று சொல்வதன் பின்னால் இருப்பதெல்லாம் அக்கறையைக் காட்டிலும் அச்சம். அதையெல்லாம் செய்யும் பெண்களை நாம் எவ்வளவு இழிவாகப் பேசிச் சிரிப்போம். ஆனால், அதே நகைப்புக்கு நம்மவர்களும் ஆளாவார்களோ என்ற பதற்றம்.

இழவு வீடு, திருமண வீடு என்று தவறாமல் ஆஜராகும் அசோகா அண்ட் கோ ஒரு நாள் கல்யாண வீட்டு டிஜேவில் குதூகலிக்கிறது. போதையில் நண்பர்களிடம் பலானப் படங்களுக்கான லிங்குகளைப் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டும் அசோகா, சைத்ரா வீடு வழியாகச் செல்கிறான்.

அவள் வீட்டுக் குளியலறையில் லக்ஸ் சோப்பு வாசனை வர, குளிப்பது அவள்தான் என்று தீர்மானித்து ஆபாசப் படங்கள் புத்தியை மழுங்கச் செய்திருக்க அவளைப் பார்த்துவிடலாம் என ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறான். அப்புறமென்ன பாத்ரூமில் இருந்த பெண் கூக்குரலிட, ரவி அண்ணா வரவழைக்கப்படுகிறார்.

அசோகாவைப் போல் ரவி அண்ணாவும் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். 50, 60 குடும்பங்களே இருக்கும் அந்த கடற்கரை கிராமத்தில் ரவி அண்ணா இன்றி ஓர் அணுவும் அசையாது. ரவி அண்ணாவின் வீர தீரம் ஊர் இளவட்டங்கள் மத்தியில் எப்பவும் ஒரு ஹைப். எல்லாவற்றுக்கும் பெயின்டிங் கான்ட்ராக்டர் ரவி அண்ணா சரியான தீர்வைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை அந்த ஊர் மக்களுக்கு.

அப்படியிருக்க, தான் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் ரவி அண்ணா தலையீடு வர அசோகாவுக்கு அச்சம் இன்னும் ஆழமாகிறது. போலீஸ், கை ரேகை என்று ரவி அண்ணாவை அவர் கூட்டாளிகள் உசுப்பேற்றுவதைப் பார்த்த அசோகா, நள்ளிரவில் வந்து குளியலறை ஜன்னலைச் சுற்றி தண்ணீர் ஊற்றி துணி கொண்டு கைரேகை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அங்கு தொடங்குகிறது அவனது பேய் வேடப் படலம். தன் தவறை மறைக்க பேய் வேடம் போட்டுக் கொள்கிறான் அசோகா. ஆனால், அந்தப் பேய் வேடம்தான் அவனை மனிதனாக்குகிறது.

ஊரும், உலகமும் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோமோ, அதற்கான வேடத்தை நாம் சுமந்து திரிகிறோம்.

ஒருவேளை நாம் நம் அந்தச் சுமையை இறக்கிவிட்டு சுயத்தை வெளிக்காட்டினால் அது பயங்கரமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை!

அசோகாவை பேய் பிடித்திருக்கிறது என்று வெளியூருக்குச் சென்ற ரவி அண்ணாவுக்கு தகவல் கிடைக்க, அவர் வந்து ‘லெஃப்ட் ஹேண்ட்’ல டீல் செய்யலாம் என்று சுலோச்சனாவை கூப்பிட்டு விசாரிக்க, இந்தா ஒரு குத்து... இத்தனை காலம் நீ காட்டிய பவுசுக்கு... என்று ஓங்கி அறைகிறது சுலோச்சனா. ரவி அண்ணாவையே அடித்துவிட்டோம் என்ற மமதையில் மயங்குவது போல் நடித்துத் தப்பிக்கிறான் அசோகா.

படத்தின் மூன்று திருப்பங்களை நான் உணர்ந்தேன். ஒன்று சுலோச்சனாவாக அசோகா பிராண்ட் செய்யப்படுவது, இரண்டு சாமியார் கருணாகரன் (ராஜ் பி ஷெட்டியின்) வருகை, மூன்று பானுவின் பிரவேசம்.

கதை இரண்டாவது திருப்பத்துக்குள் நுழையும்போது வயிறு வலிக்க சிரிப்பது கேரன்டி. என்ட்ரி கொடுக்கும்போதே எல்லோரையும் தாண்டி பெண்ணுக்கு பிரசாதம் கொடுக்கும் கருணாகரன் போலிச் சாமியாரின் ஜெராக்ஸ். அவர் சொல்லும் பரிகாரங்களையெல்லாம் செய்யும் அசோகா குடும்பமும், அவன் கிராமமும் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதுபோல், ரவி அண்ணாவின் மூடநம்பிக்கையின் ஜெராக்ஸ் நகல்கள்.

பேயோட்ட பிராசஸில் தொடை நடுங்கிகளாக வரும் ஆண்களும், சந்திரா அண்ணன், நவீனின் மனைவிகளை அவர்கள் நடத்தும் விதமும் இந்தச் சமூகத்தின் பாலின பேதம் எப்படியெல்லாம் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான சான்று.

மூடநம்பிக்கை மூடனாக, மொடா குடிகாரனாக இருந்தாலும் கூட “நீ பெண் உனக்கு அது தெரியாது இது வராது...” என்ற வியாக்கானத்துக்கும் வெட்டி வீராப்புக்கு மட்டும் குறைவிருக்காது என்பதை நிரூபிக்கும் பாத்திரங்கள்.

பானுவின் வருகைதான் இந்தப் படத்தை காமெடி ஹாரர் மட்டுமல்ல, இது சோஷியல் டிராமாவும் கூட என்றும் சொல்ல வைக்கிறது. ரவி அண்ணாவுக்கும் பானுவுக்குமான அந்த ஹிஸ்டரி (ஆம் சரியாகத்தான் படித்தீர்கள் அது ஹிஸ்டரிதான், கெமிஸ்டரி அல்ல) அடடே சொல்லவைக்கும். கதையை என்ன செய்யப்போகிறார்கள் என்று நாம் யோசிக்கும்போது சரியான கனெக்டிங் பாயின்ட்டாக இருக்கும்.

பானுவின் ஊர் சோமேஸ்வரா. அவளது தாய் பெயர் சுலோச்சனா. அசோகாவை சுலோச்சனா பிடித்திருப்பதாள் பானு தான் அசோகாவுக்குள் இருக்கும் சுலோச்சனாவிடம் பேசி என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும் என்பது சாமியார் கருணாகரனின் ப்ளான்.

பானு வருவாள் அசோகாவிடம் ‘அம்மா...’ என்று உருகுவாள். அவன் ‘ஐயோ போதும்டா சாமி!...’ என்று திமிறி விடுபட முயற்சிப்பாான். ஆனால் பானுவின் அடுத்தடுத்த வருகைகள் அவளுடைய இன்னல்களுக்கு அவனைக் காது கொடுக்க வைக்கும். அவளின் துயரம் அவன் கண் திறக்கும். அவன் விடுபட முடியாமல் தவித்த பேய்க் கோலத்தை துறக்கவும். அவன் குற்ற உணர்வை கரைக்கவும் சமுத்திர அலைகளை கண்ணீரில் அடக்கிக் கொண்டு வந்திருப்பாள் பானு.

பானுவுக்காக அவள் ஊருக்கு சேலையும், மஞ்சளும் குங்குமமுமாகச் செல்லும் அசோகா (சுலோச்சனா) அங்கே அவளுடைய சித்தப்பாவை அடித்துத் துவைப்பான். அவன் தலையின் ஓங்கி தேங்காயை உடைப்பது, அசோகா பெண் குளிக்கும்போது எட்டிப்பார்க்கும் தன் ஈன புத்தியையும் உடைக்கும் முயற்சி.

ஈனராக இருப்பது பேயாக, பிசாசாக, ஏலியானக இருப்பதைவிடவும் இழிவானதே. அது பானுவின் சித்தப்பாவுக்கும், குளியலறையை எட்டிப் பார்த்த அசோகாவுக்கும், எங்கேயாவது பார்வைகளை மேயவிடும் எல்லோருக்கும் பொருந்தும்.

பானுவை சுலோச்சனா (அசோகா) கூட்டிச் செல்லும்போது, பக்கத்து வீட்டுப் பெண், “இங்கே யாருமே அவளைக் கண்டுகொள்ளவில்லை; எங்கே அவளுக்கு நிம்மதி கிடைக்கட்டுமோ அங்கே செல்லட்டும்” என்று சொல்வது, இன்னமும் இந்தச் சமூகம் பல நேரங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.

பானு மட்டுமல்ல தனித்து வாழும் எல்லாப் பெண்களையும் இந்தச் சமூகம் லென்ஸ் பார்வை, மைக்ரோஸ்கோப் பார்வை, முன் அனுமானப் பார்வை என்று விதவிதமாகப் பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும்தான் இருக்கும். அதிலும் ஆண்கள் பலர் அவளுக்கு நூல் விட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். வெளியில் மேடம், அக்கா, அம்மா என எப்படி அழைத்தாலும் உள்ளே இவளை எந்தப் புள்ளியில் நம் வசப்படுத்தலாம் என்ற முயற்சிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதில் போல் நடந்து கொண்டே இருக்கும். அப்படியான எண்ணம் இருப்பவர்கள் அசோகாவைப் போல் பிராயச்சித்தம் தேடலாம்!

அசோகா செய்த தவறுக்கான குற்ற உணர்ச்சியில் இருந்தும், பானு சமூகம் தன்னை பழி சொல்லி குற்ற உணர்ச்சிக் குழிக்குள் தள்ளியதில் இருந்தும் விடுபடுவார்கள்.

மனிதனின் குற்ற உணர்ச்சி மாற்றத்துக்கு வழிகோலுமாயின், அது பயன் தரும். ஏனெனில் அந்தப் புள்ளியில் அது வெறும் குற்றவுணர்ச்சி என்பதைக் கடந்து, அறிவின் பிரவேசமாகப் பரிணமிக்கிறது.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in