‘பராசக்தி’ பார்த்து விட்டு திமுகவுடன் கூட்டணி எப்படி? - காங்கிரஸுக்கு புதுச்சேரி பாஜக தலைவர் கேள்வி

வி.பி.ராமலிங்கம்

வி.பி.ராமலிங்கம்

Updated on
2 min read

புதுச்சேரி: ‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்து விட்டு திமுகவுடன் எப்படி கூட்டணி வைக்கிறீர்கள்? என்று புதுச்சேரி பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “புதுச்சேரியில் காங்கிரஸார் பாத யாத்திரை சென்றனர். இதை தொடங்கும் போது 150 பேர் இருந்தனர். முடியும்போது 50 பேர் கூட இல்லை. அதுவும் சாப்பாட்டுக்கு சண்டை போட்டுக்கொள்ளும் அளவில் தான் அந்த பேரணி நடந்து முடிந்திருக்கிறது.

2016-21-ல் புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த அவர்கள் ஒன்றுமே செய்யாமல் கருப்புச் சட்டை அணிந்து கலாட்டா செய்து கொண்டிருந்தனர். எதிர்கட்சியினர் போன்று செயல்பட்டனர். இப்போது, இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்கு கேட்க வருகிறார்கள் என்று மக்களே கேள்வி எழுப்புகின்றனர். நிலைமை இப்படி இருக்க யார் ஆட்சியை பிடிப்பது? அமைச்சரவையில் எத்தனை இடம் கிடைக்கும்? தனியாக ஆட்சி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் - திமுகவினர் சண்டை போட்டு வருகின்றனர்.

பாஜக 2021-ல் என்ன வாக்குறுதிகளை கொடுத்ததோ அதைச் செய்து காட்டியுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி வந்தால் ஏழை மகளிருக்கான ரூ.2,500 உதவித்தொகை கண்டிப்பாக நின்றுவிடும். இவர்கள் எதிர்மறை அரசியல் தான் செய்வார்கள். மத்தியில் பாஜகவும், இங்கு கூட்டணி ஆட்சியும் இருந்தால் ‘இரட்டை இன்ஜின்’ அரசு தொடர்ந்து மிகச் சிறப்பாக நடக்கும் என்பது மக்களுக்கு தெரிகிறது.

‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று சொல்லி டகால்டி வேலையை திமுக காட்டுகிறது. இப்போது காங்கிரஸ், விசிகவினர் விழிப்படைந்து ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். திமுக மறுக்கிறது. தூங்கி எழுந்து திடீரென தேர்தல் நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் நியாயம் பேசுகிறார்கள். செல்வப்பெருந்தகை போன்ற கைகூலிகள் ஸ்டாலினுக்கு ஜால்ரா போட்டுவிட்டு, திமுகவை ஆதரிக்கும்படி செய்து விடுவார்கள்.

‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலம் இந்தி திணிப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு மிக மோசமான முறையில் நடந்து கொண்டனர் என்று திமுகவே அவலமாக காட்டியிருக்கிறது. பாஜக போன்ற கட்சிகள் சொல்லாததைக்கூட காங்கிரஸ் கட்சியினர் மீது பரப்பி இருக்கிறார்கள். ‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு காங்கிரஸ் எப்படித்தான் திமுகவுடன் கூட்டணி வைக்க சூடு சொரணை இல்லாமல் செல்கின்றனரோ!” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வி.பி.ராமலிங்கம், “வரும் மார்ச் 1-ம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வர இருக்கிறார். லாஸ்பேட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். கூட்டணி தொடர்பாக கட்சியின் மேலிடம் பேசி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

மேலும், “புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் பாத யாத்திரையில் கே.சி.வேணுகோபால் பங்கேற்றார். அவரை அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரே, ‘இவர் ஒரு ரவுடி; இவரால் காங்கிரஸ் வெற்றி பெறாது’ எனறு சொல்கிறார்.

1998-ல் கோவையில் நிகழ்ந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் நாசர் மதானி என்பவரை கேரளத்துக்கு ரகசியமாக வரவழைத்து சிவப்பு கம்பளம் விரித்தவர் இந்த கே.சி. வேணுகோபால். கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் ஊழல் வழக்கிலும் இவர் பெயர் அடிப்பட்டது. இதே வழக்கில் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மீது பெண் பாலியல் புகார் அளித்ததும் வெளியே வந்தது.

அண்மையில் புதுச்சேரிக்கு இதே பாத யாத்திரை நிகழ்வில் பங்கேற்க வந்த தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு கொடுத்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர். இப்படி சட்ட விரோதமாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சட்டம் - ஒழுங்கு குறித்து விமர்சிப்பது நகைப்பாக உள்ளது” என்றும் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>வி.பி.ராமலிங்கம்</p></div>
‘கோவை மக்கள் மீது இவ்வளவு வெறுப்பா?’ - தயாநிதி மாறன், செந்தில் பாலாஜிக்கு தவெக கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in