

பெரிய கோயில் மாவட்டத்தில் உள்ள ‘கோட்டை’ தொகுதியில் களமிறங்க தாமரைக் கட்சியின் ஜிஎஸ் பொறுப்பில் இருக்கும் ‘பிளாக்’ ஆனந்தம் பிரமுகர் கனவு கண்டு கொண்டிருந்தார். கட்சியின் ‘அமைப்பு’ பொறுப்பில் இருந்த ’பிள்ளையார்’ பிரமுகரின் தீவிர விசுவாசி என்பதுடன் ‘மவுன்ட்’ தலைவரின் மனதுக்கும் பிடித்தவர் ‘பிளாக்’ ஆனந்தம். அதனால் இவர்கள் தயவில் தனக்கு சீட் கன்ஃபார்ம் ஆகிவிடும் என ஸ்கெட்ச் போட்டிருந்தாராம். ஆனால், சமயம் பார்த்து ‘பிள்ளையார்’ பிரமுகரை பதவியிலிருந்து தூக்கி விட்டது கட்சி தலைமை.
இதனால், ‘பிளாக்’ ஆனந்தத்துக்கு ‘மவுன்ட் தலைவரின் விசுவாசி’ என்ற முத்திரையைக் குத்தி ‘பிளாக்’ லிஸ்ட்டில் வைத்துவிட்டாராம் இப்போதிருக்கிற தலைவர். தொகுதியை தாமரைக்கு கேட்டால் தானே பிரச்சினை என்று சொல்லி, ‘கோட்டை’ தொகுதியை தங்களின் விருப்பக் கோட்டாவில் சேர்க்காமலேயே விட்டுவிட்டாராம் தாமரைத் தலைவர்.
அதுமாத்திரமல்லாது, அந்தத் தொகுதியை கபிஸ்தல தலைவரின் கட்சிக்கு ஒதுக்கலாமே என தாமரைக் கட்சி தரப்பிலிருந்தே கூட்டணித் தலைமைக்கு குறுக்கு யோசனையும் சொல்கிறார்களாம். இதையெல்லாம் தெரிந்து, ‘பெரிய கோயில்’ மாவட்டத்தில் இருக்கும் ‘வூரணி’, ‘யாறு’ ‘வூர்’ தொகுதிகளில் எது கிடைத்தாலும் முட்டிப் பார்ப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் ‘பிளாக்’ ஆனந்தம்.