

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெகவுக்கு ஆட்சியமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாராத திருப்பமாக திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கெடுத்தது.
தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வரவிருக்கும் அடுத்தடுத்த தேர்தல்களிலும் தவெகவுடன் இணைந்தே பயணிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்பியபோதும், திமுக உடனான கூட்டணியே தொடர வேண்டும் என்பதில் ப.சிதம்பரம் பிடிவாதமாக இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், மாநிலத்தின் நிர்வாக ரீதியிலான பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், தவெக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், இந்தச் சந்திப்பு அந்த இடத்துக்கான பேச்சுவார்த்தையாகவே இருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.