

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், மாதவரம் ரவுண்டானா பகுதியிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லவும் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2013-ல் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 2023-ல் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடுக்குப் பதிலாக, கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டுமென மாநில போக்குவரத்து ஆணையர் கடந்த 2024 ஜன.22-ல் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகரில் இருந்து பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஏ.அன்பழகன், தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஏ.அப்ஸல் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் ஆம்னி பேருந்துகளை வழக்கம்போல கோயம்பேட்டில் இருந்து இயக்கலாம் என்றும், போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லலாம் என்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டுமென இடைக்காலமாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கவும், அதை பராமரிக்கவும் மாநில போக்குவரத்து குழுமத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விண்ணப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம் தான் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆம்னி பேருந்துகளை எந்தெந்த வழித்தடங்களில் இயக்க அனுமதியும், உரிமமும் வழங்கப்பட்டுள்ளதோ திடீரென அதை தடுக்கும் விதமாக மாநில போக்குவரத்து குழுமம் உத்தரவிட முடியாது.
எனவே தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருந்தும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் ஏழை, எளியவர்கள் மட்டும் புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு சென்று அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் சென்னை மாநகருக்குள் அனுமதி வழங்குவது ஏற்புடையதல்ல என்றும், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
வரவேற்பு: இதனிடையே அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தீர்ப்பை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், இத்தீர்ப்பின் மூலம், பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். தனியார் பொதுப் போக்குவரத்து துறையின் நலன்களை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாக இது அமைந்துள்ளது. இதற்காக உயர் நீதிமன்றத்துக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.