

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஈரான் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஈரான் தலைவர்கள் வலுவானவர்கள், பெருமைமிக்கவர்கள். ஆனால் தாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம் என்று நினைத்த சில காரியங்களை அவர்கள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை, இதற்குச் சற்று காலம் எடுக்கும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும், அண்மைநாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருதரப்பிற்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அண்மைய தாக்குதல்கள் அனைத்தும் தற்காப்புப் பொருட்டே நடத்தப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்படுவதாக எழுந்துள்ள விமர்சனங்களை மறுத்த டிரம்ப், "வியட்நாம் போர் 19 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் இந்த மோதலுக்குள் வந்து மூன்று மாதங்களே ஆகிறது. அதற்குள் எப்போது வெற்றி பெறுவீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒரு ஜனநாயகக் கட்சி அதிபராக இருந்திருந்தால் யாரும் இப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது அவர்களிடம் 21% முதல் 22% வரையிலான ஏவுகணைகளே எஞ்சியுள்ளன என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.