

அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடிக்கு வரவில்லை என்றால், தண்ணீரை திறந்துவிட்டாலும் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு நீர் போய் சேர்வது எளிதாக இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் செயல்படும் தனியார் பள்ளியில், தவெக சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: 436 திட்டப்பணிகளை ஐந்தாண்டு காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்திலேயே தீர்மானம் வெளியிட்டு, முதல்வர் வரலாறு படைத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து உபரி நீர் வரும் என்று நினைத்தோம். தென்மேற்குப் பருவமழை குறைந்ததால், 12 மாவட்டங்களில் வறட்சி வர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மழை குறைந்ததால் அணைகளில் நீர்வரத்து குறைந்து, தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மேட்டூரைப் பொறுத்தவரையிலும் கடந்த 21 ஆண்டு காலத்தில் 7 முறைதான் ஜூன் 12-ம் தேதி அன்று தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 91 அடிக்கு வரவில்லை என்றால், தண்ணீரை திறந்துவிட்டாலும் கடைக்கோடி மக்களுக்கு நீர் போய் சேர்வது எளிதாக இருக்காது. இவ்வாறு கூறினார்.