

அமைச்சர் சேகர்பாபு
திண்டுக்கல்: “தவெகவின் அமைச்சரவை பட்டியல் என்பது இல்லாத உருட்டு. போகாத ஊருக்கு வழி காண்பிக்கும்" என அமைச்சர் சேகர்பாபு கிண்டல் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்துள்ள அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கட்கிழமை (இன்று) தனது குடும்பத்துடன் குறிஞ்சியாண்டவர் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். அதற்கு, மக்களின் முகத்திலேயே தெரியும் மகிழ்ச்சிதான் சாட்சி.
சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டை தான். 2021 மற்றும் 2024 தேர்தலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் திமுகவுக்கு கிடைத்தது. கடந்த தேர்தலில் சென்னையில் பதிவான வாக்குகளே 2026 தேர்தலிலும் பதிவாகியுள்ளன.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்ற பழமொழிக்கு எங்களால்தான் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்று சொல்லும் தவெகவுக்குப் பொருந்தும்.
2021 தேர்தலுக்கு பிறகு 2024 மக்களவைத் தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய களப்பணி வியப்புக்குரியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதல்வர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. தேர்தல் திசைக்காட்டியாக அவர் அளித்த பயிற்சியில் தேர்தல் களத்தில் ராணுவ வீரராக நின்றவர்கள் தற்போது களைப்பாற சுற்றுலா வந்துள்ளனர்.
தவெகவின் அமைச்சரவை பட்டியல் என்பது இல்லாத உருட்டு. போகாத ஊருக்கு வழி காண்பிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.