

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்
புதுச்சேரி: “திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடமை என்பது செங்கோட்டையன், விஜய், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் இருக்கிறது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு இன்று மாலை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்து மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக பாஜக சார்பில் பிரிவுகளின் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்கு நான் செல்கிறேன்.
தமிழகத்தில் பாஜக - அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை. அதை நோக்கித்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு மிகமிக மோசமாக உள்ளது. அவர்கள் இளைய அரசருக்கு முடிசூடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி பிறந்த நாளில் செலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. எனவே, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அப்பாவு போன்றவர்கள் கூட மிகவும் தவறாக பேசுகிறார்கள். நடுநிலையாக இருக்க வேண்டிய அவர், ஆளுநரை பற்றி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடு இருந்தால் கருத்தை சொல்லுங்கள், அதற்கு வார்த்தைகளை தவறாக பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில் திமுக நாகரிகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகர்வாகத்தான் நான் பார்க்கின்றேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர் அனுபவமான அரசியல்வாதி, அவர் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்கு பலம் சேர்க்கும். மற்றப்படி அதிமுக - பாஜக கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
திமுக எது நடந்தாலும் பாஜகதான் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். செங்கேட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கும் பாஜகதான் காரணம் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியானால் உதயநிதி கொண்டாட்டத்துக்கு பாஜகதான் காரணமா? தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜகதான் காரணமா?
உதயநிதி மூலம் மீண்டும் கோட்டையை பிடிப்போம் என்று சொன்னவர்கள், செங்கோட்டையன் செய்தியினால் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜகவை பார்த்து திமுகவும், இண்டியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர். பாஜக - அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி வைத்துள்ளோம். அதில் பிரச்சனை வந்தால் அதற்கு பாஜக பொறுப்பல்ல. இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எதிர்கட்சியின் வாக்குகள் சிதறக் கூடாது. சிதறாமல் ஒரு வியூகம் அமைக்க வேண்டும்.
எதிரணியினரின் கூட்டணி பலவீனம் அடைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. குறையவும் குறையாது.
செங்கோட்டையன், விஜய், டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என யாராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமை, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி திமுகவை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த வியூகத்துக்குள் எல்லோரும் வர வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் சிறப்பாக வழிநடத்தி வருகிறது. நான் துணைநிலை ஆளுநராக இருக்கும்போதே மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தது, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தது என பல திட்டங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இரட்டை இஞ்சின் அரசு என்று சொல்லக்கூடியது இதுதான்.
15 ஆண்டுகாலம் இடைக்கால பட்ஜெட் தான் போடப்பட்டது. முழுநேர பட்ஜெட் நாம் வந்த பிறகுதான் போடப்பட்டது. அது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் தான் நடந்தது. ஆகவே இரட்டை இஞ்சின் இன்னும் தொடர வேண்டும்.
முந்தைய காங்கிரஸ் அரசால் நடந்த பிரச்சனைகளால் தான் உடனடியாக சில வளர்ச்சி திட்டங்களை கொடுக்க முடியவில்லை. ஆனால் இன்று புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி போய் கொண்டிக்கிறது. புதுச்சேரி மக்கள் மறுபடியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.