

எல்.கே.சுதீஷ் |கோப்புப் படம்
“கடந்த 2011 தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் இன்றைக்கு அதிமுக கிடையாது” என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் மயிலாப்பூரில் இருந்து தொடங்கினார். அப்போது தேமுதிக-வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், "அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த எல்.கே.சுதீஷ், “கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக மட்டும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், அதிமுக-வால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. 2011-ல் தேமுதிக இல்லை என்றால் இன்றைக்கு அதிமுக இல்லை.
நாங்கள் எதிர்பார்த்த மற்றும் விரும்பிக் கேட்ட தொகுதிகளில் சுமார் 70 சதவீத இடங்களை வழங்க திமுக ஒப்புக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதாக பழனிசாமி கூறுவது உண்மை இல்லை. தற்போதைய சூழலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு திருப்திகரமாக இருக்கிறது" என்று சொன்னார்.