

“யாரையும் நம்பி திமுக இல்லை... தனித்தே போட்டியிடுவோம். முடிவெடுங்கள் தலைவரே”.. நேற்றைய தினம் திருவாரூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த இந்தக் கருத்துக்கு, “தனித்துப் போட்டியிடுவது குறித்தும் பரிசீலிப்போம்” என்று பதில் சொல்லி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கூட்டணிகளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் நிலைமை வந்த பிறகு திமுக தனித்துப் போட்டியிட்டதாக வரலாறு இல்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட அப்படியான ஒரு பரீட்சைக்கும் தயாரானது திமுக. அப்போது திமுக தலைமையில் தமிழகத்தில் உதித்த ‘ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே இருந்தன. இதில், திமுக தவிர பிற கட்சிகளின் அன்றைய வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட திமுக அந்தத் தேர்தலை தனித்தே எதிர்கொண்டதற்குச் சமம் தான்.
அந்தத் தேர்தலில் திமுக-வுக்கு 23.6 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் ஓரிடத்தில் கூட அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. அதேசமயம் யாரையும் கூட்டு சேர்க்காமல் தனித்தே தைரியமாக களமிறங்கிய அதிமுக, 44.3 சதவீத வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளை வென்றது. அப்போது தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்த அதிமுக, ஓட்டுக்கு தலா ரூ.200 வீதம் அனைத்துத் தொகுதிகளிலும் நீக்கமற பட்டுவாடாவை முடித்ததே இந்த வெற்றியின் பிரதான சூத்திரமாக அப்போது பேசப்பட்டது. அந்தத் தேர்தலில் பாமக-வும் பாஜக-வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தலா ஒரு தொகுதியை வென்றன.
பாமக-வுக்கு 4.4 சதவீதமும் பாஜக-வுக்கு 5.5 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி களம் கண்டன. அதன்படி, சிபிஎம் 9 இடங்களிலும் சிபிஐ 8 இடங்களிலும் போட்டியிட்டு தலா 0.5 சதவீத வாக்குகளைப் பெற்றன.
தனித்துப் போட்டி என்ற முடிவை அன்றைக்கு திமுக தலைமை எடுத்தது. ஆனால் இப்போது, தொண்டர்களே திமுக-வை அந்த நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தோல்வி குறித்து கள ஆய்வு செய்வதற்காகச் சென்ற குழுவினரிடம், “கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இருந்து நமக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. நம்மால் வெற்றி பெற்றவர்கள் இப்போது நன்றி மறந்துவிட்டு ஏதேதோ பேசுவதைக் கேட்கும் போது நெஞ்சு கொதிக்கிறது. இனிமேல் நமக்கு எந்தக் கூட்டணியும் வேண்டாம்; தனித்தே தேர்தலைச் சந்திப்போம்” என்ற ரீதியில் தங்களது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள். இதையும் உள்வாங்கி இருப்பதாலேயே “தனித்துப் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம்” என்று ஸ்டாலின் பொதுவெளியில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தென் மண்டல திமுக வழக்கறிஞரணி நிர்வாகி ஒருவர், “இந்தத் தேர்தலில் யார் யாரோ பேச்சைக் கேட்டுக் கொண்டு, களத்தில் நிற்கும் தொண்டனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது திமுக தலைமை. ஆனால், கட்சி தோற்றுவிட்டது என்றதும் அந்தத் தொண்டன் தன்னெழுச்சியாக களத்துக்கு வந்து நிற்கிறான். கட்சி தோற்றதாக நினைக்கவில்லை... ஏதோ தானே தோற்றதைப் போன்ற உணர்வுடன் டீக்கடைக்கு வந்து காரசாரமாகக் கருத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறான். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் செய்த நம்பிக்கைத் துரோகத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
இந்தத் தேர்தலில் தென் மாவட்டத்தின் பிரபலமான தொகுதி ஒன்றில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை அன்று காலையில் எங்களோடு பேசிக் கொண்டிருந்த போது, ‘நீங்க ஜெயிச்சிருவீங்க. அதிமுக ரெண்டாவது இடம் வந்துவிடும். ஒரு முப்பதாயிரம் வாக்குகளையாவது வாங்கினால் தான் தலைமைக் கழக நிர்வாகியாக இருக்கும் என்னை மதிப்பார்கள்’ என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை தவெக-வினரே எதிர்பார்க்காத ஒன்று தான் நடந்திருக்கிறது.
ஆளும் கட்சியால் அனைவரையும் திருப்திப்படுத்திவிட முடியாது என்பது அண்ணாவே சொன்னது. எனவே, என்னதான் தவெக தலைகீழாக நின்றாலும் ஆட்சிக்கு எதிரான அலை என்பது இயல்பாகவே 10 சதவீதம் வந்துவிடும். இது அதிகாரத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமே பொருந்தும். 2014-ல் திமுக தனித்து நின்றபோது ஜெயலலிதா என்ற சக்தி இருந்தது.
ஆனால், இப்போது ஜெயலலிதா இல்லாத அதிமுக அக்குச் சுக்காய் சிதறிக் கிடக்கிறது. அப்படியே அவர்கள் மீண்டு வந்தாலும் பாஜக-வுடன் கைகோத்தே களத்துக்கு வருவார்கள். இப்போது தங்களை ஆதரிக்கிறவர்களுடன் சேர்ந்து விஜய் களத்துக்கு வருவார். அப்படியான சூழலில் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்து நின்றால் 25 முதல் 28 சதவீத வாக்குகளை எடுக்கும் என்பது எங்களின் கணிப்பு. அந்தளவுக்கு வாக்குகளைப் பெற்றாலே 75 சதவீத இடங்களை கைப்பற்றிவிட முடியும். அந்த வெற்றியை வைத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கும் திமுக தன்னை தயார்படுத்திக் கொள்ளும்” என்றார்.
திமுக-வின் இன்னொரு தரப்பினரோ, “தனித்துப் போட்டி என்பதெல்லாம் இனி வரும் காலத்துக்கு சரிப்பட்டு வராது. அதேசமயம், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கப் போன விசிக மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இப்போது அந்த அணி கசக்க ஆரம்பித்திருக்கிறது. தங்களால் ராஜினாமா செய்யவைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்களை மீண்டும் தேர்தலில் ஜெயிக்கவைத்து தனது சுயபலத்தை பெருக்கிக் கொள்ளவே நினைக்கிறது தவெக. அப்படியான நிலை வந்தால் விசிக மற்றும் தோழர்களின் தயவு அந்தக் கட்சிக்கு தேவை இருக்காது.
இதைப் புரிந்து கொண்டு தான் முதல்வர் விஜய்யின் ஸ்டாலின் விரோத நடவடிக்கைகளை அந்தக் கட்சிகள் கண்டிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது உரசலாக மாறும் பட்சத்தில் அந்தக் கட்சிகள் மீண்டும் திமுக பக்கம் வரலாம். அவர்களை மீண்டும் கட்டுச் சோற்றுக்குள் வைத்துக் கட்டுவதைவிட மமக மற்றும் தேமுதிக-வை தக்கவைத்துக் கொண்டு பாமக-வையும் நாதக-வையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலையை திமுக தலைமை செய்ய வேண்டும்” என்றும் சொல்கிறார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்க்கலாம்.