முதல்வர் ரங்கசாமி ஆன்மிகவாதியாக இருப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? - தவெக எம்எல்ஏ

முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

Updated on
2 min read

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி ஆன்மிகவாதியாக இருப்பது அவருக்கு மட்டும் தான் நன்மை, மக்களுக்கு என்ன நன்மை” என்று புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், தவெக எம்எல்ஏவுமான சாய் ஜெ சரவணன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற போதும், தமிழகத்தில் முதல்வர் விஜய் பதவியேற்றபோதும், அவர்களுடன் அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் புதுச்சேரியில் விந்தையாக உள்ளது. அமைச்சர் பதவி வழங்காமலும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமலும் இருக்கிறது. புதுச்சேரி முதல்வர் ஒரு ஆன்மிகவாதி. அது அவருக்கு மட்டும் தான் நன்மை. மக்களுக்கு என்ன நன்மை.

அவர் தேசியவாதியாக இருந்தால்தான் மக்களுக்கு நன்மை, மக்களை பற்றி பேசுவார். தமிழகத்தில் விஜய் முதல்வர் பதவியேற்றார். அனைவரிமும் பொறுப்புகளை பிரித்து கொடுத்துவிட்டார். அமைச்சர்களும் பணி செய்ய ஆரம்பித்துவிட்டனர். பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு வந்துள்ளார். ஆனால் புதுச்சேரியில் எந்தவிதமான வேலைகளும் நடக்கவில்லை. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கினால் தான் தொகுதிக்கு தேவையானதை சம்மந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து கேட்க முடியும்.

திருபுவனை தொகுதி சிறியது. இங்கு 21 ரெஸ்டோ பாருக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அது எதனடிப்படையில் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்க வேண்டும். அதனை யாரிடம் கேட்பது. முதல்வர் எந்த அமைச்சரையும் நியமிக்கவில்லை. எந்த துறையும் யாருக்கும் ஒதுக்கவில்லை, எல்லாவற்றையும் நான்தான் பார்க்கின்றேன் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்.

அப்படி சொல்லவிட்டால் அவரையே நாங்கள் நேரடியாக பார்த்து கேட்போம். அரசு கல்வி நிறுவனங்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் பினாமியாக பல பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றன. அங்கு லட்ச கணக்கில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து துணைநிலை ஆளுநர் தலையிட்டு கண்காணிக்க வேண்டும். பெற்றோர் தன்னுடைய ஊதியத்தில் இருந்து 37 சதவீதம் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். அதற்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர்.

இதனை யார்தான் கேட்பது. கேட்க வேண்டிய எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் அறைகூட ஒதுக்கப்படவில்லை. அதிகாரிகளே ஆட்சி செய்தவற்கு தேர்தல் எதற்கு?. புதுச்சேரி சட்டக்கல்லூரி 1974-ல் தொடங்கப்பட்டது. இதில் 60 இடங்கள் மட்டுமே அன்றுமுதல் இன்றுவரை உள்ளது. அதை ஏன் உயர்த்துவதில்லை.

முதல்வர் டென்னிஸ் விளையாடுகிறார். அது அவரது உடல் நலத்தை பாதுகாக்க. அதுபோன்று மக்கள் நலனுக்கு பிரதமரை சந்தித்து கேட்க வேண்டியதை எல்லாம் அவர் கேட்க வேண்டும். புதுச்சேரி மாநில அந்தஸ்து வேண்டும் என்று எத்தனையோ ஆண்டுகளாக கேட்டு கொண்டிருக்கின்றனர்.

40 எம்பிக்களை வைத்திருந்த திமுக அதன் கூட்டணி கட்சிகள் கூட இதனை கேட்கவில்லை. ஆனால் தவெக முதல் ஆளாக நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது கண்டிப்பாக புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்தை கேட்கச் சொல்வோம். அடுத்த வாரம் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவரிடம் இதையெல்லாம் எடுத்துச் சொல்வோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். பொழுதை கழிப்பதற்கான இடம் புதுச்சேரி அல்ல. தமிழகத்தில் முதல்வர் கோயில், பள்ளி, கல்லூரி அருகில் இருந்த மதுக்கடைகளை அகற்றிவிட்டார். அதேபோல் புதுச்சேரி முதல்வர் செய்வதாரா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற மதுக்கடைகள், ரெஸ்டோ பார்களை உடனடியாக அகற்ற வேண்டும். முதல்வர் ரங்கசாமி உடனடியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

அவர் கண்டிப்பாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கேட்க வேண்டியதை கேட்க வேண்டும். பெற வேண்டியதை பெற்று வர வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் தவெக போராட்டங்களை கையில் எடுக்கும். என்றார்.

அப்போது, லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏவால் தான் அமைச்சர்கள் நியமனம் தாமதமாவதாக சொல்லப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு, “ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகர் தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். அவர் மாற்றட்டும் அப்புறம் பார்ப்போம்,” என சாய் ஜெ சரவணன்குமார் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>முதல்வர் ரங்கசாமி </p></div>
“விஜய் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” - பிரேமலதா பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in