

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு பொம்மைகளையும் முதல்வர் பரிசளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பி.சரவணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
நடமாடும் குழுக்கள் ஏற்பாடு: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டுமருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கெனவே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30-ம் தேதிகளில் தற்காலிக மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,641 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 6,564 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.